திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.120 திருமூக்கீச்சரம் (உறையூர்) பண் - செவ்வழி |
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.
|
1 |
வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா
விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக்
கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே.
|
2 |
மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே.
|
3 |
அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந்
தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்
மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே.
|
4 |
விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்
அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.
|
5 |
வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள்
வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம்
அந்தணமா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே.
|
6 |
அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்
உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான்
அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.
|
7 |
ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங்
கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல்
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.
|
8 |
நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்
சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்
சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வில்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே.
|
9 |
வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்
ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர்
பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.
|
10 |
மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன
சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |